தென்னிந்திய பரம்பரை ஜோதிடர்கள் நலச் சங்கம் சார்பில் முதல் ஜோதிட மாநாடு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர். இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தென்னிந்திய பரம்பரை ஜோதிடர் நலச் சங்கத்தின் முதல் ஜோதிட மாநாடு விமர்சையாக நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு தென்னிந்திய தலைவர் துடியலூர் ஸ்ரீ ருத்ர மணிகண்டன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். மாநாட்டிற்கு தென்னிந்திய சபைத் தலைவர் தஞ்சாவூர் குமார், தென்னிந்திய கவுரவ அவைத்தலைவர் வடுகப்பட்டி இளங்கோவன், தென்னிந்திய கவுரவத் தலைவர் தஞ்சாவூர் கணேசன், தென்னிந்திய செயலாளர் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீசாய் சசிகுமார், தென்னிந்திய பொருளாளர் துடியலூர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டிற்கு திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போதும், ஜோதிடம் எப்போதுமே பொய்யாகாது, ஜோதிடர்கள் கணிக்கும்போது சில நேரங்களில் தவறுகள் நடக்கலாம், ஜோதிடம் என்பது பாதுகாப்பு போன்றது, ஜோதிட சங்கத்திற்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்.
தொடர்ந்து மாநாட்டில் ஜோதிட சங்கத்திற்கு என பிரத்யேக ஜோதிட மென்பொருளை உருவாக்கி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ஜோதிடர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இம்மாநாட்டில் மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர். இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த சங்க மாநாட்டில் நலிவுற்ற ஜோதிடர்களுக்கு நல்வாழ்வு அளிக்க ஜோதிட நல வாரியம் அமைக்க வேண்டும், அனைத்து கலைக் கல்லூரிகளிலும் ஜோதிடத்தை ஒரு பாடமாக வைக்க வேண்டும், இந்து சம்பிரதாயங்களில் உள்ள அறிவியல் பூர்வ விளக்கங்களை ஆராய அதற்கான குழுவை அரசு சார்பில் அமைத்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முறையாக ஜோதிடம் பயின்ற ஜோதிடர் ஒருவரை அரசு ஊழியராக நியமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பரிகார ஸ்தலங்களில் பொதுமக்கள் பரிகாரம் செய்ய பரிகார மண்டபங்களை அரசு சார்பில் கட்ட வேண்டும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் திருக்கோயிலுள்ள பாடசாலைகளில் பயில ஜோதிடர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், அரசு ஜோதிடத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்து முறையாக ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர்களுக்கு தொழில் பாதுகாப்பை வழங்க வேண்டும், இந்துக்களுக்கு ராமர் பிறந்த அயோதிக்கு வழிபடச் செல்ல இந்து அறநிலைய துறை வருவாயின் மூலம் இலவச பயணம் அல்லது அரசு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கோரிக்கைகளாக வைக்கப்பட்டது.
இம்மாநாட்டில், தென்னிந்திய நிர்வாகத் தலைவர் சேலம் ரத்தினம், தென்னிந்திய ஒருங்கிணைப்பு தலைவர் கவுந்தபாடி சரவணன், தென்னிந்திய துணைத் தலைவர்கள் கவுந்தபாடி உதயகுமரகுருபரன், செட்டிபாளையம் பிரசன்ன ராஜா, கோவை மாவட்ட தலைவர் செந்தில் குமார் உள்பட தமிழ்நாடு மாநில நிர்வாகிகள், கேரள மாநில நிர்வாகிகள், ஆந்திர மாநில நிர்வாகிகள், கர்நாடகா மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர்.

