இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா இசையமைத்த 1976 முதல் 2001 வரை 134 திரைப்படங்களின் பாடல்கள், இசை, ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கு தான் சொந்தம் என சரிகம நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
மேலும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்த நிரந்தர காப்புரிமை பெற்றுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம தெரிவித்திருந்தது.
ஆனால் இளையராஜா அந்த 134 பாடல்களை, தனது சொந்த பாடல் என கூறி டிஜிட்டல் தளங்களுக்கு கொடுத்துள்ளார். இது சட்டவிரோதம் என சரிகம வாதிட்டது.
மேலும் 1957ல் காப்புரிமை சட்டத்தின் பிரிவின் படி, ஒரு படத்துக்காக உருவாக்கப்பட்ட இசை, ஒலிப்பதிவு, பாடல் வரிகள் அனைத்தும் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதை சரிகம குறிப்பிட்டு வாதிட்டது.

இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தின் படி தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால், தயாரிப்பாளரிடம் இருந்து நிரந்தரமான உலகளாவிய உரிமைகளை சரிகம நிறுவனம் பெற்றிருப்பதால், 134 பாடல்களை இளையராஜா உள்ளிட்ட யாரும் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ, மூன்றாம் தரப்பினருக்கு உரிமமாக வழங்கவோ தடை விதித்து உத்தரவிட்டார்.
இது இளையராஜாவுக்கு, இளையராஜா ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தாலும், இளையராஜா இது போன்ற வழக்குகளை ஏராளமாக சந்தித்து வருகிறார்.
இளையராஜாவின் பல பழைய பாடல்கள் அனுமதியில்லாமல் திரைப்படங்களில் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்ற வரும் நிலையல், இந்த இடைக்கால உத்தரவு தொடர்பாக இரு தரப்பும் அடுத்த கட்ட விசாரணைக்காக தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

