நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இவர் மாநாட்டில் பேசிய உரை, தமிழக அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தின.
காரணம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்ததையடுத்து, பல கட்சிகள் தவெக கூட்டணிக்குள் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை தவெகவுடன் எந்த கட்சியும் இணையவில்லை.
யார் வந்தாலும், வராவிட்டாலும் தனியாக வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து தேர்தலில் தீவிர களப்பணியாற்றி வரும் தவெகவினர், பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று திருவள்ளூர் ஆவடி அடுத்த திருநின்றவூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் மகளிர் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து ஒரு பெண் மேடை ஏறினார்.
ராஜ்மோகனிடம் இருந்து மைக்கை வாங்கிய பெண், எனது பெயர் ராஜேஸ்வரி, என்னை எல்லோரும் தாக்குகிறார். காவல் நிலையத்தில் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
என்னை பெற்றோர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என சரமாரியாக குற்றம்சாட்டினார். எனக்கு பாதுகாப்பே இல்லை, நான் பெற்றோருடனோ, கணவருடனோ இருக்க விரும்பவில்லை என கூறிய பெண், திடீரென கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அனைவரும் முன்பு காட்டியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மேடை ஏறி பெண்ணை சமாதானப்படுத்தும் போது, நான் என்ன பைத்தியமா? கொரோனா காலத்தில் இரவு நேரத்தில் வேலை பார்த்த நான் பைத்தியமாக என கேட்க, பெண் போலீசார் மற்றும் பெண் பவுன்சர்கள் மேடை ஏறி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி அழைத்து சென்றர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
தவெக கூட்டத்தில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு ஏதோ ஒரு பிரச்சனையாக வெடித்து வரும் நிலையில், ஆவடியில் நடந்த கூட்டத்தில் விசித்திரமான பிரச்சனையை தவெக சந்தித்தது குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

