முன்னாள் அமைச்சர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புதியதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் அதிகளவு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு, அதிமுக நிர்வாகி தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அங்கு 320 யூனிட் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் உடனே பறிமுதல் செய்தனர். அதே போல விஜயபாஸ்கரின் கட்டுமானத்தில் இருக்கும் வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கிருந்த 35 யூனிட் ஆற்று மணலை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்து லாரி மூலம் ஏற்றி, அரசு மணல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.
முன்னாள் அமைச்சர் வீட்டில் அரசு மணல் அனுமதியின்றி பதுக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

