தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக எம்.பி. திருமதி கனிமொழி, எப்போதும் போல உண்மைகளை அறியாமல் பேசுகிறார். தனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் ஊழல் நிரம்பிய தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு தவறியதால், இந்த திட்டங்களின் செயல்பாடு தாமதமாகி வருகிறது.

இந்த ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவையான 4,326 ஹெக்டேர் நிலங்களில், 2025 டிசம்பர் நிலவரப்படி, தமிழ்நாடு அரசு வெறும் 24% நிலங்களையே கையகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன.
இதே நிலை தமிழ்நாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பொருந்துகிறது. ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை செயல்படுத்துவதில், ஊழல்மிக்க திமுக அரசு திட்டமிட்டு ஏற்படுத்திய தடைகளால் அளவுக்கு மீறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாள் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக, ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை முடிக்க தேவையான நிலம் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை தனது சகோதரரிடம் திருமதி கனிமொழி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

