அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக அரசியலில் நிதர்சனமான, உண்மையான போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையேதான் உள்ளது. நடிகர் விஜயை ஒரு அரசியல் சக்தியாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நானும் ரவுடிதான், என்னை ஜீப்பில் ஏற்றுங்கள்’ என்று ஒருவர் கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்?” என விமர்சித்தார்.
மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும், ஈவு இரக்கமும் இன்றி கட்சியின் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் நடனம் ஆடியதாக குற்றம்சாட்டினார். “அந்த குடும்பங்கள் எவ்வளவு மனவேதனை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “த.வெ.க. தலைவராக இருக்க நடிகர் விஜய்க்கு அரசியல் அருகதை இல்லை. லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தில்தான் அவர் அரசியல் கட்சியை நடத்துகிறார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே மட்டுமே” என்றார்.
அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவித்த ஜெயக்குமார், “பிரதமர் வந்தார் என்பதற்காக அவருடைய கட்சியினர் அவரை உயர்த்திப் பேசலாம். ஆனால் தெளிவான, நிதர்சனமான நிலைப்பாட்டுடன் கூடிய கூட்டணி அ.தி.மு.க. தலைமையில்தான் அமையும். எங்களுக்கு மேலே யாரும் இல்லை; அனைவரும் எங்களுக்குக் கீழேதான்” என கூறினார்.

