சென்னை நந்தனத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
அதே உணவகத்தில் பணிபுரிந்த 22 வயது பெண்ணை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்து குணசேகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணை இதே சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கண்ணீருடன் கல்லூரியில் பணியாற்றும் காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குணசேகரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, நந்தனம் பகுதியில் நிகழ்ந்த கடுமையான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிர்வுகள் இன்னும் நீங்காத நிலையில், அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 22 வயது பெண் ஒருவர் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

