எனது அரசியல் பயணத்தில் இதுவரை நான் தடம் மாறவில்லை என பரபரப்பு விளக்கம் அளித்திருந்தார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா.
இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகம் எனும் தமிழ்நாட்டின் முன்னணி வெகுஜன மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு வலிமையை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது, நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற நமது ‘மாநில மற்றும் மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.’

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில், கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில், கழகத் தோழர்களின் ஒற்றுமையில், மக்கள் ஆதரவுடன் மாபெரும் மக்களாட்சி வரலாற்றைப் படைக்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம். மக்களின் வாக்களிக்கும் கடமைக்கு பக்கபலமாக, “ஊருக்கு ஊர்.. வீதிக்கு வீதி.. வீட்டுக்கு வீடு” முன்னின்று மக்களுக்காக ஜனநாயக பணி ஆற்ற உறுதியேற்றார்கள் நமது கழக செயல்வீரர்கள்.
ஒவ்வொரு வீட்டிற்கும் நமது வெற்றிச் சின்னம் ‘விசில்’-ஐ கொண்டு சேர்ப்போம். குடும்பம் குடும்பமாக உள்ள நமது வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவோம்.

இதன்மூலம், மக்கள் விரும்பும் முதல்வர் நம் கழகத் தலைவர் அவர்கள், மக்கள் போற்றும் மக்களாட்சி நாயகராக வாகை சூட இருக்கிறார்.
அந்த வெற்றிக் கொண்டாடத்தின் அடையாளமாக ஆர்ப்பரித்து ஒலிக்கிறது நமது வெற்றிச் சின்னம் விசில். இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் விசில், நாளை மலரவிருக்கும் மக்களாட்சி எழுச்சியின் வெற்றி முழக்கமாக மாறப்போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

