தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்துவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவர் பதிவிட்டுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார் ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார் வியப்புக்குரிய மனிதர்தான்.
அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது
உணவு முறை உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது எங்கள் நூறு நிமிட உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின.

வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அவரது கலைப்பயணத்தின் திட்டங்களை விவரித்தார். 2027 ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக்கொள்ளுங்கள்
அவரிடம் முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை ‘இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது’ என் தமிழ் பொய்யாகவில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக வடநாட்டு அரசியலில் திருப்பம் நேரப்போவதாக ரஜினி கூறியது என்ன? 2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டு என வைரமுத்து குறிப்பிட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான விமர்சனங்களையும், கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

