கேரள எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில், மது போதையில் மாணவிகளுடன் காரில் தாறுமாறாகச் சென்ற மாணவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் வார இறுதி விடுமுறையைக் கழிக்கச் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் அடங்கிய கும்பல் ஒன்று, மது போதையில் நிதானமின்றி காரில் கேரளா நோக்கிப் பயணம் செய்து உள்ளது.
இதில் ஒரு மாணவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்து உள்ளது. குனியமுத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டு இருந்த போதே, சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதுவது போல் அதிவேகமாக தாறுமாறாக இயக்கி உள்ளனர்.
சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு காரைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும், மாணவர்கள் எதற்கும் செவிசாய்க்காமல் மின்னல் வேகத்தில் காரைப் பறக்க விட்டனர்.

இந்த வெறித்தனமான பயணத்தை மற்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அடுத்து, தமிழக – கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச் சாவடியில் போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி மாட்டிக்கு பிடித்தனர்.காரை விட்டு இறங்கிய மாணவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
காரில் இருந்த இரண்டு மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களைக் கோவை வெரைட்டி ஹால் போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்த முயன்றது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

