தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என சொல்வது அவ்வப்போது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது தனித்து போட்டியிட்டது.
இரு தேர்தல்களிலும் தோல்வியை கண்ட அதிமுக, தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. ஆனால் இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன்.
தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார் டிடிவி. நேற்று வரை இபிஎஸ் – டிடிவி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி அரசியல் நடத்தி வந்த நிலையல், இன்று மீண்டும் இருவரும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது அரசியலில் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து #மக்களைக்காப்போம், #தமிழகத்தைமீட்போம் ! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

