கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்முக்கிய திருப்பமாக,
கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் செல்ஃபோன் உரையாடல் தொடர்பான
தடயவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புற பகுதியில், ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி, மூன்று இளைஞர்களால்
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகியோர் துடியலூர் அருகே பதுங்கி இருந்த போது
போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

சிகிச்சைக்கு பின்னர் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,
கருப்பசாமி மற்றும் தவசி காயம் குணமடைந்துள்ளதும், காளீஸ்வரன் இன்னும் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே 50 பக்கங்கள் மற்றும் 200 பக்கங்களாக
குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது
செல்ஃபோன் உரையாடல் ஆதாரங்கள் அடங்கிய 270 பக்க கூடுதல் குற்றப்பத்திரிக்கை
மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் பீளமேடு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்காக மூன்று குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக
நடக்க இயலாத காளீஸ்வரனை, மற்ற இருவர் கை தாங்கலாக அழைத்து வந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி,வருகிற ஜனவரி 21-ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து,
அன்றைய தினம் மூவரையும் மீண்டும் ஆஜர்படுத்த
போலீசாருக்கு உத்தரவிட்டார்.
