ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக அரசின் உரிய உரிமம் இல்லாமல் இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனை அடுத்து உரிய அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாததலும் இன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர், தலமலை, கேர்மாளம் பகுதியில் உள்ள 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர் தலைமையில் ஊராட்சி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஆசனூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

