ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “த..தா. (தந்தையும் தாயும்)” என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அசோகா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருமான வரித்துறை உதவி ஆணையர் ஜெயபிரகாஷ் மற்றும் திரைப்பட நடிகர் செல்லா கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துறை தலைவர் ஜோன் அந்தோணி ராஜா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
யோகநாதன் அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்த “த..தா. (தந்தையும் தாயும்)” குறும்படத்தில் நடிகர் செல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு, மனிதனுக்கும் கன்றுக்குட்டிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை அடிப்படையாக வைத்து மனித உணர்வுகள், உறவுகளின் ஆழம் மற்றும் சமூக பார்வையை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நடிகர் செல்லாவின் நடிப்பு, “ஒரு சிறந்த நடிகர் தான் ஒரு திரைப்படத்தின் ஆன்மா” என்ற கருத்தை உணர்த்தும் வகையில் பாராட்டுக்குரியதாக அமைந்தது.

மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த குறும்பட வெளியீட்டு விழா, அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் நிறைவில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் நன்றி உரை வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

