2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
அதிமுக தற்போது வேட்பாளர் தேர்வு செய்து விருப்ப மனு வாங்கி, நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ராஜபாளையம் தொகுதியை கேட்டு விருப்பமனு அளித்துள்ளார் நடிகை கவுதமி.
விருப்பமனு அளித்து இபிஎஸ் உடன் நேர்காணலில் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களோடு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளோடு நெருக்கமாகவே பயணித்து வருகிறேன். அந்த நம்பிக்கையில்தான் அங்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன். வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை” என திடமான நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலுக்கு யாரும் வரலாம். ஆனால் அதிமுக வாக்கு வங்கியை விஜய் ஒருபோதும் கைப்பற்ற முடியாது” என்று கடுமையாக பதிலளித்தார்.
விஜயின் அரசியல் பயணம் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது; அவரது நகர்வுகளை காத்திருந்து பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் தீர்மானமே இறுதி முடிவாக இருக்கும் என்றும் கவுதமி அர்த்தமுள்ள வகையில் தெரிவித்தார்.

