கோவை சாய்பாபா காலனி பகுதியில், தனியார் மகளிர் கல்லூரியில் பாஜக வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் முழக்கங்களை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சுற்றுப்புற சூழல், கார்பன் நியூட்டலுக்காக இன்று வாக்கத்தான் நடைபெற்றது என்றார். கார்பன் நியூட்டன் கோவைக்கு வெர்ச்சுவல் மரம் நடவு எனப்படும் செல்போனை குறிப்பிட்ட நேரம் சுவிட்ச் ஆப் செய்து கார்பன் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 92 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இணைந்ததாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சுற்றுப்புற சூழல் உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றிலிருந்து மாறுபட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மனிதனும் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

எனவேதான் பஞ்சாமிர்தம் என்ற ஒரு மிகப்பெரிய சொல்யூஷனை உலகம் முழுவதும் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். கார்பன் நியூட்ரல் கோயம்புத்தூர் என்பது மாநில அரசு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது என்றும் ஆனால் மாநில அரசிடம் இருந்து சட்டமன்ற உறுப்பினராக எங்களுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
எங்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் மாநில அரசாங்கம் ஒரு பெயருக்கு தான் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் தவிர அதனை முன்னெடுத்துச் செல்வதில்லை என தெரிவித்தார்.
கார்பன் நியூட்டலில் மிகப்பெரிய பங்காற்ற வேண்டியது உள்ளூர் நிர்வாகங்கள் என்று குறிப்பிட்ட அவர் ஆனால் மாநில அரசு இதற்காக நிதி ஒதுக்குவதில்லை என்றும் இதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலும் மாநில அரசிடம் இல்லை என்று விமர்சித்தார்.
மாநில அரசுக்கு பெயர்களில் இருக்கக்கூடிய விளம்பர மோகம்தான் உள்ளது என்றும் அதனை செயல்படுத்துவதில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்று தெரிவித்தார்.

