விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.
குறிப்பாக நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று நடந்த விசாரணையில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜனநாயகன் படம் வரும் 11 அல்லது 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்ததால் படம் வெளியாவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருபெரிய படங்களும் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில் ஏமாற்றத்தில் உள்ள ரசிகர்களுக்கு இன்னொரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மோகன் ஜி இயக்கிய திரௌபதி 2 படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இது குறித்து மோகன் ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், #திரெளபதி2 திரைப்படம் நம் மண்ணின் வரலாறு.. வரலாற்றில் பதிவானவற்றை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள, திரையில் பதிவு செய்துள்ளோம். மூன்றாம் வீரவல்லாள மகாராஜரும், வீரசிம்மகாடவராயரும் சேர்ந்து வெள்ளித்திரையில் இந்த பொங்கல் தினத்தன்று வருகிறார்கள்.. நாளை சனிக்கிழமை, மாலை முன்னோட்டம், ஆட்டம் ஆரம்பம்..உங்கள் ஆதரவை எதிர்நோக்கி.. என பதிவிட்டுள்ளார்,.

