காலை உணவுத் திட்டத்தைப் போலவே, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் லேப்டாப் என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், இந்தத் திட்டம் உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு இது முக்கிய காரணமாக இருந்ததாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளாக இலவச லேப்டாப் வழங்கவில்லை என்றும், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அத்தியாவசியமாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது தேர்தலை முன்னிட்டு மீண்டும் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்குவது போல நாடகம் நடத்துவதாகவும், இதற்காக திரைப்படத் துறையினரை அழைத்து விளம்பர படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோலவே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி, அதிமுக ஆட்சியில், திருவான்மியூர் அரசு பள்ளியில் அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்ததாகவும், ஆனால் அந்தத் திட்டம் திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
அதேபோன்று, தற்போது இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்றும், இது வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்யப்படும் அரசியல் நாடகம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிகளை மாணவர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிந்துள்ளதாகவும், இன்றைய இளம் தலைமுறையை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும், வரும் தேர்தலில் திமுக அரசு வீழ்த்தப்படும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

