கரூரில் பிரபல தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியுள்ளார் பிரபல சீரியல் நடிகை.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நடிகை ராணி, பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்துள்ள அவருக்கு பாலாஜி என்கிற பாலமுருகன் என்கிற கணவர் உள்ளார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு கரூரில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
ரூ.10 லட்சம் குத்தகைக்கு பேரம் பேசிய நிலையில் பணம் இன்னும் தரவில்லை. கடந்த மாதம் கரூர் வந்த பாலாஜி, விடுதி உரிமையாளரான நாமக்கல்லை சேர்ந்த தினேஷிடம், உங்களுடை சொகுசு கார் என் மனைவிக்கு பிடித்துள்ளது, இரண்டு நாள் பயன்படுத்திவிட்டு தருவதாக கூறியுள்ளார்.
உடனே உரிமையாளரும், எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் காருக்குள் 5 சவரன் வைரத் தோடு இருந்துள்ளது. இதையடுத்து பாலாஜிக்கு போன் செய்து, காருக்குள் இருக்கும் வைர நகைகள் மனைவியுடையது. நகை மற்றும் காரை திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

ஆனால் பாலாஜி மற்றும் அவரது மனைவி ராணி, ராணியின் உறவினரான புருஷோத்தமன் ஆகியோர் எதையும் கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, கரூர் காவல்நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார்.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக 3 பேருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பினார். ஆனால் புருஷோத்தமனை நள்ளிரவில் அழைத்து சென்று காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் ராணியும் அவரது கணவரும் ஆஜராகாத நிலையில், வரும் புதன்கிழமைக்குள் (டிச., 31) ஆஜராகுமாறு எச்சரித்துள்ளனர்.

