கோவை அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓரைக்கால்பாளையம், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனி குடியிருப்பு வளாகம் பகுதியில், 25.12.2025 அன்று 5 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக,அன்னூர் காவல் நிலைய குற்ற எண் 635/2025, பிரிவுகள் 140 மற்றும் 303(2) BNS கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் புகார்தாரர் இம்ரான் @ அம்ததுல் இஸ்லாம் (29) என்பவர், தமது 5 வயது மகன் காணாமல் போனதாகவும், வீட்டில் வைத்திருந்த VIVO செல்போன் (மதிப்பு ரூ.10,000/-) திருடிச் செல்லப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்களிடம் வரவேண்டிய சம்பளப் பணம் ரூ.1,80,000/- வழங்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனியில் முன்பு பணிபுரிந்த அன்வர் அலி (18) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர், சம்பளப் பணம் தொடர்பான முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தி, புகார்தாரரின் செல்போனை திருடிச் சென்று, பணம் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், அன்னூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து, கடத்தப்பட்ட குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். சம்பவத்திற்குரிய திருடப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

