
கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோழிகள் மற்றும் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த கோழிகள் மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது அதன்படி தமிழக–கேரள எல்லை சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் இறைச்சி வாகனங்கள் மேலும் கோவையிலிருந்து இறைச்சிகளை ஏற்றி சென்று திரும்பும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன.

மேலும் வாகனங்கள் எங்கிருந்து வருகிறது எங்கு செல்கிறது என்பதற்கான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது இந்த பரிசோதனைகளுக்குப் பின்னரே வாகனங்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன
முதல் கட்டமாக வாளையார் சோதனை சாவடியில் இந்த தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழக–கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

