
உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் என இருவகைப் பறவைகளுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் வளமிக்க மாநிலமாக திகழ்கிறது. இதன் காரணமாக, பறவைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை, இனப்பல்வகை ஆகியவற்றை கண்காணிப்பது மிக முக்கியமான பணியாக விளங்குகிறது.
இந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இராட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) செயல்படும் வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி மையம், சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப்பல்வகை நிலவரத்தை துல்லியமாக அறிய மாநில அளவிலான கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025–2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக, ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் உள்நாட்டுப் பறவைகள் மற்றும் கடலோர ஈரநிலங்களில் காணப்படும் பறவைகள் கணக்கிடப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக, நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகளின் வருகை பொதுவாக அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலத்துடன் ஆரம்பித்து, ஏப்ரல் மாதம் வரை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, நீர்நிலப் பறவைகள் கணக்கெடுப்பை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இடம்பெயரும் பறவைகளின் வருகை ஆரம்பகட்டத்தில் உள்ள தரவுப் பற்றாக்குறைகளை (Data Gaps) நிரப்பும் நோக்கில் இந்த காலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 2024–2025 ஆம் ஆண்டில், 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களிலும் உள்ள 934 ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில், உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் என மொத்தம் 397 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மொத்தமாக சுமார் 5.5 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டதாக வனத்துறை தெரிவித்தது.
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு மூலம், தமிழ்நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பு நிலவரம் குறித்து துல்லியமான தரவுகள் பெறப்படுவதுடன், எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய அடித்தளமாக இது அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு வனக் கோட்டத்திலும் (Forest Division) குறைந்தபட்சமாக 25 இடங்களில் நீர்நிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பில் அனுபவம் வாய்ந்த பறவையியல் பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர், கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே தங்களது பெயர்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
