
OLA, Uber, Rapido போன்ற தனியார் டாக்சி சேவைகளின் அதிக கட்டணம் மற்றும் ரத்து பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆப் மூலம் நியாயமான கட்டணம், வெளிப்படையான சேவை மற்றும் ஓட்டுநர்–பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆப் மூலம், பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் சமநிலை கொண்ட கட்டண முறை அமல்படுத்தப்படும் என்றும், இடைத்தரகர் கமிஷன் குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் கட்டண கட்டுப்பாடற்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த ஆப், அரசு ஆதரவு பெற்ற டிஜிட்டல் தளமாக செயல்படும். பயணிகள் நேரடியாக ஓட்டுநர்களை தொடர்புகொண்டு சேவையைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையற்ற கமிஷன் கட்டணங்கள் தவிர்க்கப்பட்டு ஓட்டுநர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் பாதுகாப்பு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஆப்பில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. ரியல்-டைம் லொக்கேஷன் டிராக்கிங், அவசர உதவி பட்டன், பயண விவரங்களை குடும்பத்தினருடன் பகிரும் வசதி போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறும்.
கட்டண நிர்ணயம் தொடர்பாகவும் புதிய முறை பின்பற்றப்படும். மாநில அரசுகளின் போக்குவரத்து துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால், பீக் ஹவர் என்ற பெயரில் திடீர் கட்டண உயர்வு இருக்காது என கூறப்படுகிறது. இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பயணிகளுக்கு பெரும் நன்மை கிடைக்கும்.
இந்நிலையில், நீண்ட காலமாக தனியார் டாக்சி நிறுவனங்களின் சேவையால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் மத்தியில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, தினசரி அலுவலக பயணிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இந்த ஆப் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சி, போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆப் செயல்படும் எனவும், எதிர்காலத்தில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய ஆப் எப்போது அறிமுகமாகும், எந்த நகரங்களில் முதற்கட்டமாக செயல்படும், பதிவு செய்யும் நடைமுறை என்ன என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த ஆப் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
