கோவை, செட்டிபாளையம் சங்கம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (36) இவர், நடன பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். மேலும் தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் அவர் தனது இருசக்கர வாகனத்தில் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடன நிகழ்ச்சிகாக சென்று உள்ளார்.
அப்போது நடன நிகழ்ச்சிக்காக இரவு பள்ளியிலேயே கனகராஜ் மற்றும் அவரது நண்பர் பிரபாகரனும் தங்கி உள்ளனர். காலையில் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்தார்.
இதை அடுத்து இது தொடர்பாக சுந்தரபுரம் காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சுந்தராபுரம் காவல் துறையின், சம்பவ தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதன்படி அந்த பகுதியில் உள்ள பல்வேறு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.அதில் பழனி அருகே உள்ள மடத்துகுளம் பகுதியில் இருசக்கர வாகனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து கடந்த புதன் கிழமை மடத்துக்குளம் சென்ற போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முகமது அலி (29) என்ற வாலிபர் பைக்கை திருடியது தெரியவந்தது.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து பைக்கை மீட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விரைவாக பைக்கை மீட்டு கொடுத்த சுந்தராபுரம் போலீசாருக்கு பைக் உரிமையாளர் கனகராஜ் நன்றி தெரிவித்தார்.

