திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏழுமலை 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், சித்ரா தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
மூத்த மகளுக்கு திருமணமாகி காஞ்சிபுரத்தில் வசித்து வரும் நிலையில், இளைய மகள் (18) மட்டும் தாயுடன் இருந்துள்ளார். இந்நிலையில், சித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான கந்தன் (31) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 13ஆம் தேதி இரவு, வீட்டில் இருந்த தாய் சித்ரா மற்றும் இளைய மகள் மாயமானதாக மூத்த மகள் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சித்ராவின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கேரளாவுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு, கேரளாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்ட பகுதியில் சித்ரா, அவரது மகள் மற்றும் கந்தன் ஆகியோர் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளம்பெண் தன்னை வாயில் துணி வைத்து தாயுடன் சேர்ந்து கந்தன் கடத்தியதாகவும், பின்னர் கட்டாயமாக தாலி கட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தாய் சித்ரா உடந்தையாக இருந்ததும் விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பாலியல் வன்கொடுமை, பெண்ணுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சித்ரா மற்றும் கந்தன் இருவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

