ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களுக்கு கையசைத்த த.வெ.க. தலைவர் விஜயை கண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.
கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
“ஈரோட்டில் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். இதுவே அரசியல் அல்லவா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அரசியல் இல்லையா, அல்லது சிலர் போல அநாகரிகமாக பேச வேண்டுமா?

நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்கள் பணத்தை மக்களுக்கே வழங்குவது இலவசம் அல்ல. மக்கள் பணத்தில் மக்களுக்காக செய்யப்படுவதை இலவசம் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

‘ஓசி’ என்று கூறி மக்களை அவமதித்தால், அதை தட்டிக்கேட்க நான் வருவேன். மக்களுக்கு ஏதாவது நடந்தால், இந்த விஜய் வந்து நிற்பான்; அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
‘சொன்னால் மட்டும் போதுமா?’ என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த வீடு இருக்கிறதா? அப்படியானால் வாடகை வீட்டில் யாரும் வசிக்கவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

