கோவையில் இளம் பெண்ணை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் தனது மனைவியுடன் கோவை, சோமனூர், நஞ்சுண்டாபுரத்தில் குடியேறி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். மனைவியும் அங்கு வேலை செய்த ஒரு இளம் பெண்ணும் தோழியாக பழகினர். அப்பொழுது ஜெகனுக்கு மனைவி மூலம் இளம்பெண்ணின் செல்போன் எண் கிடைத்தது. இளம் பெண்ணின் அழகில் மயங்கிய ஜெகன் அவரிடம் அடிக்கடி போன் செய்து பேசி வந்தார். இதனால் ஜெகனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று ஜெகனுக்கு அந்த இளம்பெண் கை கடிகாரத்தை பரிசாக வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜெகன், அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அந்த இளம் பெண்ணை விரும்புவதாகவும், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். அதற்கு இளம்பெண் சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு, எதுவும் தெரியாதது போல் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார். இளம் பெண்ணின் தங்கை வீட்டுக்கு வந்து பார்த்த போது அக்காள் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவலின் பெயரில் காவல் துறையினர் வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதலில் மர்ம சாவு என்று வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் விசாரணை தொடங்கினார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த இளம் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு சட்டப் பிரிவுகளின் சேர்க்கப்பட்டன. இதை அடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். இதில் ஜெகன் அந்த வீட்டுக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது. உடனே அவரைப் பிடித்து விசாரித்த போது இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

