தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமனம். தமிழக அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என அனைத்து கட்சிகளும் களத்தில் தேர்தல் வேலை செய்ய ஆரம்பித்துள்ளன. பொதுமக்களை நேரில் சந்தித்து இப்போது இருந்தே வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் பூத் ஏஜெண்டை நியமிக்கும் பணிகளை தீவிரப் படுத்தி உள்ளனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை நியமித்துள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மற்றும் முரளிதர் அவர்களையும் நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக மூன்று மத்திய அமைச்சர்களை பாரதிய ஜனதா கட்சி களமிறக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

