கோவையில் உள்ள சுங்கச்சாவடியை சுற்றி இரவு நேரங்களில் திருநங்கைகள் உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை புறநகர் பகுதிகளான கணியூர் சுங்கச்சாவடி (Toll Gate) அருகாமையில் இரவு நேரங்களில் திருநங்கைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே இவர்கள் அதிக அளவில் நிற்பதால், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், திருநங்கைகளின் அதிகப்படியான நடமாட்டத்தால் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சுங்கச்சாவடி பகுதியில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால், இது கல்லூரி மாணவர்களை தகாத வழிக்கு இட்டுச் செல்லவும், பாலியல் குற்றங்கள் நடக்க வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதிவாசிகள், சுங்கச்சாவடிக்கு அருகாமையில் இவர்கள் நிற்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் நபர்களை வழிமறித்து அவர்களிடம் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர்,” என்று தெரிவித்தனர்.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

