உள்ளூரில் விலை போகாத மாடு என அண்ணாமலை கோவையில் போட்டியிடும் போது கூறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதை கூறுவதற்கு தகுதி இல்லாதவர் எனவும் திமுகவை கோவையில் காப்பாற்ற வேண்டும் என செந்தில் பாலாஜி நினைத்தால் தொண்டாமுத்தூரில் எஸ் பி வேலுமணிக்கு எதிராக நிற்க வேண்டும் ஆனால் அது அவரால் முடியாது எனவும் சூலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சுகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுகுமார் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். முன்னதாக விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் விசில் மாலை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சூலூர் தொகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருக்கும் குளத்தையும் நொய்யல் ஆற்றையும் தூர்வாரி சீரமைப்பேன் என்றும் உள்ளூர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் கூறினார்.
பாரம்பரியமாக திராவிட இயக்கத்தில் தங்களது குடும்பம் இருப்பதாகவும் 1929 இல் தந்தை பெரியாரை கோவைக்கு அழைத்து வந்து கட்சியை துவங்கியது தனது தாயாரின் தாத்தா தான் என்றும் கடந்த ஜனவரி மாதம் வரை திமுகவில் இருந்த தான் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து சூலூர் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
திமுகவில் தற்பொழுது பாரம்பரியமாக இருந்தவர்களுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும் அங்கு உரிய மரியாதை இல்லாததன் காரணமாகவே தவெக வில் இணைந்ததாகவும் கூறிய அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு கீழ் பணியாற்றுபவர்களையும் அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கும் மட்டுமே பதவிகளை வழங்குவதாகவும் வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என அவர் நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அண்ணாமலை கோவையில் போட்டியிட்ட பொழுது உள்ளூரில் விலை போகாத மாடு என விமர்சித்த நிலையில் தற்போது உள்ளூரில் விலை போகாமல் செந்தில்பாலாஜி கோவையில் போட்டியிடுவதாகவும் அந்த வார்த்தையை கூறுவதற்கு தகுதி இல்லாதவர் ஆகிவிட்டார் எனவும் சாடினார். இதேபோல் கோவையில் திமுகவை காப்பாற்ற வேண்டும் என அவர் நினைத்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்பி வேலுமணிக்கு எதிராக அவர் போட்டியிட வேண்டும் ஆனால் அவர் அதை செய்ய மாட்டார் என்றும் திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கை மூலம் மக்களை விலை கொடுத்து வாங்க பார்க்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
மேலும், அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள் எனவும் ஊழல் விஷயத்தில் அவர்களைப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது அதிமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்வேன், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என்றும் சுட்டி காட்டினார்.

