கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிலிண்டர் ஏற்றி வந்த லாரியைச் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலாந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும், நீண்ட நாட்களாக சிலிண்டர் டெலிவரி செய்யப்படாததால் குடும்பத் தலைவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், இன்று அப்பகுதி வழியாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக லாரியை வழிமறித்து சிறைபிடித்தனர். ‘ஒரு மாதமாக சிலிண்டர் தராமல் எங்களை ஏமாற்றுவது ஏன்?’ என லாரி ஓட்டுநரிடம் பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலாந்துறை போலீசார், லாரியைச் சிறைபிடித்த மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் எரிவாயு ஏஜென்சியைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிலிண்டர்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
10 நாட்கள் நடைபெறும் பேரூர் பட்டீசுவரர் கோவில் பெருவிழா.. களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா..!
இதுபோன்ற தட்டுப்பாடுகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களது சிலிண்டர் விநியோக நிலையை மொபைல் செயலிகள் மூலம் கண்காணிக்கலாம் என்றும், தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

