இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் இணைந்து நடித்துள்ள பிரமாண்ட படம் துரந்தர் 2 கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முன் வெளியான முதல் பாகம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்திருந்ததால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருந்தது.
அந்த எதிர்பார்ப்பை தாங்கியபடியே திரைக்கு வந்த துரந்தர் 2, ஆரம்ப கட்டத்தில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்றாலும், விமர்சனங்களில் கலவையான கருத்துக்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) வெளியிட்டுள்ள விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியதாவது: “இப்போதுதான் துரந்தர் 2 பார்த்தேன். ஒரு நல்ல கதையை எப்படி சலிப்பாக மாற்றலாம் என்பதற்கு இது ஒரு textbook உதாரணம். முடிவில்லாத, பொருளற்ற காட்சிகள் நிரம்பிய இந்த படம், ஒரு நீண்ட பாடப்புத்தகத்தை படிப்பதுபோல் சோர்வை ஏற்படுத்துகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், “படம் நகரும் போது, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் பொறுமையே சோதிக்கப்படுகிறது. திரையில் நடக்கும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதால், அதை சீரியஸாக பார்க்காமல் சிரிப்பதற்கே தள்ளப்படுகிறோம். இந்த படத்தை பார்க்கவேண்டும் என நினைத்தால் கூட, திரையரங்கில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம். ஓர் OTT தளத்தில் சாதாரணமாக பார்ப்பதற்கே இது ஏற்றது” என தெரிவித்துள்ளார்.
ரன்வீர் சிங்கின் நடிப்பையும் அவர் விடாமல் விமர்சித்துள்ளார். “அவர் படத்தை தாங்கி நிற்கிறார் என்கிறார்கள். ஆனால் அவர் எதை தாங்குகிறார்? எனக்கு தெரிந்தது அவரது நீண்ட முடி மட்டுமே. முதல் பாகத்தில் இருந்த கவர்ச்சி, தனித்துவம் இதில் இல்லை. இங்கு அது கூட ஒரு இடையூறாகவே தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் இடம்பெறும் வன்முறை குறித்து அவர் கூறுகையில், “இது ஒரு திரைப்படமாக தெரியவில்லை. கையில் கிடைக்கும் எதையும் பயன்படுத்தி எவ்வளவு விதங்களில் வன்முறையை காட்டலாம் என்பதற்கான visual guide போல உள்ளது. இதற்கு விருதுகள் பற்றி பேச வேண்டாம்… நோபல் பரிசு கிடைக்கும் அளவுக்கு போய்விட்டது” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

முடிவில், “துரந்தர் 2 ஒரு பெரிய ஏமாற்றம். அதிகபட்சம் தூக்கத்தை வரவைக்கும் படம். முதல் பாகம் உங்களை உற்சாகப்படுத்தியிருந்தால், இந்த இரண்டாம் பாகம் ‘ஏன் இது?’ என்ற கேள்வியை எழுப்பும். ரன்வீர் இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய நடிகர். ஆதித்ய தார் தொடர்ந்து அதே தேசப்பற்று, பிரச்சார முறை கதைகளில் சிக்கிக் கொண்டுள்ளார். அதிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது” என கடுமையாக சாடியுள்ளார்.
இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதத்தை தூண்டியுள்ளது. துரந்தர் 2 குறித்து பார்வையாளர்களின் கருத்துக்கள் இப்போது இரண்டு துருவங்களாகப் பிரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

