கோவை, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்களன்று நடத்திய வாகன சோதனையில், அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை (FST 3) பொறுப்பாளரும், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளருமான குறிஞ்சி செல்வி தலைமையிலான குழுவினர் காலை 8 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிஎன் 99 ஏபி 5888 (Volvo XC 90) எண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது காரினுள் உரிய ஆவணங்களின்றி 29 வகையான வெளிநாட்டு ரக மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதை அடுத்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜோத்தீஸ்வரன் (29) என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் சென்னை சில்க்ஸ் உரிமையாளரின் தனிப்பட்ட கார் ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் சொகுசு காருடன் ஓட்டுநர் ஜோத்தீஸ்வரனை போத்தனூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு (Cr. No: 89/2026 u/s 4(1)(c) TNP Act) செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட ஓட்டுநரை காவல் நிலைய பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

