உடுமலை பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் நான்கு பேருக்கு புதிய வாழ்வை வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சேர்ந்த S. விக்னேஷ் அவர்களின் மகன் V. சிவாதித்யா தனது தாத்தாவுடன் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததை மருத்துவக்குழு கண்டறிந்தது.
இதனைத் தொடர்ந்து, சிவாதித்யாவின் பெற்றோர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) விதிமுறைகளின்படி பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகிய உடல் உறுப்புக்கள் கோவை ராயல் கேர், சேலம் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தினர்.
சிறுவனின் உடலுக்கு மரியாதை செலுத்தி அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது சிறுவனின் பெற்றோர்களின் உன்னத செயலை அனைவரும் பாராட்டினர்.

