தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து பணியாற்றி வருவதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.
மேலும் தனது கட்சி தலைமையில் கூட்டணி என்றும், கூட்டணி போடும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், இதுவரை தவெகவுடன் கூட்டணி போட எந்த கட்சியும் வரவில்லை. இதனால் தவெக தனித்து போட்டியிடும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கட்சியுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் விஜய், எப்படி பாஜகவுடன் கூட்டணி போட சம்மதித்தார் என தவெக நிர்வாகிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று கட்சியின் பொதுச்செயலார் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 120 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாகவும், அதில் 90க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் பாஜகவுடன் கூட்டணி போட ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை நம்பி ஓட்டு போட காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கட்சி இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில், வழக்கம் போலவே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப் படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக யூகங்களின் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது.
கழக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, கழகத்தின் சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே கழகத் தோழர்கள் பின்பற்றவும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

