சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்ப்டடுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 உயர்ந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி பட்டும் படாமல், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இதுவரை ரூ.868.50 ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.928 ஆக அதிகரித்திருக்கிறது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்காது; விரைவாக இயல்பு நிலை திரும்பி விடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ள நிலையில், தற்காலிகமாக இந்த விலை உயர்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்களே தாங்கிக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

