நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு”. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் பின்னணி பணிகள் நடைபெறும் போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக ஆர்.ஜே. பாலாஜி திட்டத்தில் இருந்து விலகியதாகவும் சமூக வலைதளமான X தளத்தில் தகவல்கள் பரவின. மேலும், மீதமுள்ள பணிகளை முடித்து படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, “டேய் சும்மா இருடா” என்ற வசனத்துடன் நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் பிரபல மீம் படத்தை பகிர்ந்து வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

