தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும். இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 இடங்களில் தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், மற்றொரு இடத்தில் பா.ம.க.வும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், பா.ம.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

