கோவை, சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் மெட்டல் கடை ஊழியர் ஒருவர் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (எ) கார்த்திக் (38). இவர் கோவை குறிச்சி பிரிவு பகுதியில் தங்கி இருந்து, சுந்தராபுரம் பகுதியில் உள்ள ‘ஜக்காளம்மன் மெட்டல்ஸ்’ என்ற கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
38 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி சாலையில் ஜெயபிரகாஷ் இரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்து உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுந்தராபுரம் போலீசார், ஜெயபிரகாஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஏதேனும் மோதி விட்டு நிறுத்தாமல் சென்றதா? அல்லது ஏதேனும் தகராறு ஏற்பட்டு, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுச் சாலையில் வீசப்பட்டாரா? என சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயபிரகாஷ் கடைசியாக யாரிடம் பேசினார்? இரவு எங்கிருந்து வந்தார்? என்பது குறித்த தகவல்களை அவரது செல்போன் சிக்னல்களை வைத்துச் சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

