இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்.
101 வயதாகும் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2 நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்மதார். தென் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நல்லகண்ணு சாதி கொடுமையை தீவிரமாக எதிர்த்து வந்தார்.
இளம் வயதிலியே சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்று வந்தார். இயற்கை வளங்களை காக்க தொடர்ந்து போராடி வந்தவர். தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு நதிகளை காக்க போராடினார்.
பொதுவாழ்வில் நேர்மை, தொண்டு , தியாகம், எளிமையின் அடையளமாக திகழ்ந்த நல்லகண்ணு 1925 டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த அவர் கம்யூனிஸ்ட்வாதியாக மாறினார்.

18வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முழு நேரமாக தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு 7 ஆண்டு சிறை சென்றார்.
பணம், பதவிகளை விரும்பாத நல்லகண்ணு அரசியலில் தூய்மையாளராக இருந்தார். தமிழக அரசு தந்த ரூ.1 லட்சம் கட்சிக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கொடுத்தார். கட்சி கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பி அளித்தார். 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் விருதை வழங்கி கவுரவித்தது.
நல்லகண்ணு உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிதீவிர சிகிச்சையில் இருந்த போதும் உறுப்புகள் செயலிழந்ததால் காப்பாற்ற முடியவில்லை என்றும், நல்லகண்ணு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
1.55க்கு அவர் இயற்கை எய்தினார், பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதி தீவிர கண்காணிப்பையும் வைத்திருந்தனர். இன்று காலை முதல் நல்லகண்ணு உடல், மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்தது என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

