கோவை அருகே திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் வீடு புகுந்து காதலி மற்றும் மூதாட்டியை படுகொலை செய்து வெறி செயலில் ஈடுபட்ட வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இருசக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு 18 மற்றும் 16 வயதில் இரு மகள்கள் உள்ளனர். மேலும், பூபதியின் தாய் மயிலாத்தாள் என்பவரும் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
16 வயதில் இருக்கும் மகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். 18 வயதில் இருக்கும் மகள் கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நெகமம் கப்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், 16 வயதில் இருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாள் அடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் பூபதிக்கு தெரிய வந்தது. எனவே அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதற்கு இடையே அபிஷேக் தனது பெற்றோருடன் சேர்ந்து 16 வயதில் இருக்கும் சிறுமியை திருமணம் செய்து கொள்ள அவரது குடும்பத்தினரை அணுகியதாக கூறப்படுகிறது. இருப்பினும், திருமணத்திற்காக சட்டம் பூர்வ வயதை எட்டவில்லை, என்பதால் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
அத்துடன் திருமண வயதை வந்ததும் 16 வயதில் இருக்கும் மகளுக்கு அபிஷேக் உடன் திருமணம் செய்து வைக்கலாம், என்று குடும்பத்தினர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அபிஷேக் தொடர்ந்து காதலி வீட்டினரை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு பூபதி வீட்டுக்கு சென்ற அபிஷேக், அங்கிருந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதை 16 வயது சிறுமி மறுக்கவே அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை குத்தி உள்ளார். மேலும், இதை தடுக்கச் சென்ற பாட்டி மயிலாத்தாவுயும் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கா, அபிஷேக்கை தடுத்த போது அவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் 16 வயது சிறுமி மற்றும் பாட்டி மயிலாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அக்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதில் அக்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெகமம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 16 வயது சிறுமி மற்றும் பாட்டி மயிலாத்தாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் அபிஷேக் நெகமம் காவல் நிலையத்தில் சரண்டடைந்துள்ளார். மேலும், இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

