‘வசீகரா’ முதல் அனிருத் ஹிட்ஸ் வரை – மெய்மறந்த மாணவர்கள் – மாணவர்களுடன் சேர்ந்து பாடிக் கொண்டே குத்தாட்டம் போட்ட ஜோனிதா.
கோவையில் கே.பி.ஆர் கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகி ஜோனிதா காந்தி பாடிக்கொண்டு நடனமாடி பிரபல இசையமைப்பாளரின் பாடலை பாடி கல்லூரி மாணவர்கள் இடையே வைப் செய்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.பி.ஆர் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா (Inter-College Meet) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகப் பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் இசை கச்சேரி அரங்கேறியது. ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களைப் பாடி மாணவர்களைத் தனது குரலால் கட்டிப்போட்ட ஜோனிதா காந்தி, 90-களின் எவர்கிரீன் பாடலான ‘வசீகரா’ பாடலைத் தொடங்கினார்.
அந்தத் தருணத்தில் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கள் அலைபேசி டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டு, பாடகியுடன் இணைந்து ஒருமித்த குரலில் பாடி அந்த இடத்தையே ஒளிரச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ராக்ஸ்டார் அனிருத்தின் பாடல்களுக்குப் பாடிக்கொண்டே ஜோனிதா காந்தி மேடையில் உற்சாகமாக நடனமாடியது அரங்கத்தையே அதிர வைத்தது. தளபதி விஜய்யின் பாடல்களுக்கும் அவர் போட்ட ஆட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மெல்லிசை மற்றும் துள்ளல் இசை என இரண்டிலும் கலக்கி, மாணவர்களோடு இணைந்து அவர் செய்த ‘வைப்’ (Vibe) புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

