கோவை மாவட்டம் வால்பாறையில், தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை நகராட்சியில் 60-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் தங்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, இவர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த நகரமன்றத் தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம், நகராட்சி மேலாளர் மற்றும் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தப் போவதாகக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

