இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா 108 தட்டுக்களில் கல்விச் சீர் வழங்கிய மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களை கவுரவித்தனர்.
கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுவந்து பள்ளிக்கு வழங்கி அசத்தினர்.
கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் 1926-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி உள்ளது. தேசிய கீதம் இயற்றிய இரவீந்தரநாத் தாகூர் இப்பள்ளிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். இப்பள்ளி தொடங்கி இந்த ஆண்டோடு 100-ஆண்டுகள் ஆவதை ஒட்டி நூற்றாண்டு விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இதில், முதல் நிகழ்வாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108-தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள், பேனா, பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச், சாக்பீஸ், டஸ்டர், பேப்பர், மார்க்கர், நோட்புக், கடிகாரம், தம்ளர், ஸ்கேல், ஸ்டேப்ளர், பைல்கள், மேப்கள் என பள்ளிக்கும், மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டுவந்து வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் 100-ஆண்டுகள் ஆன வந்தேமாதரம் பாடல்கள் பாடப்பட்டன. தலைமை ஆசிரியர் ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.
முன்னாள் மாணவர் கந்தசாமி பள்ளி வரலாற்றை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜாய் நிர்மலா ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சி ஆர் ஐ பம்ப்ஸ் நிறுவன பைனான்ஸ் வைஸ் பிரசிடெண்ட் முகுந்த், சி எஸ் ஆர் ஹெட் ராஜா, இடிகரை பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனன், முன்னாள் மாணவர் ஐ ஆர் கோவிந்தராஜ், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, ரங்கநாதன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து விழா சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி சார்பில் சால்வை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் இப்பள்ளி ஆரம்பிக்க உதவியவர்களின் குடும்பத்தினர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளியில் 100 சதவிகித வருகைப்பதிவு உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும், கட்டுரை போட்டி, ஓவியம் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் இருந்து இந்த ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் தற்போது பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜனுக்கு ஆசிரியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் வழங்கி புதிய சுழல் கோப்பை இந்த ஆண்டு குறிஞ்சி அணிக்கு வழங்கப்பட்டது. மருதம் அணிக்கு சிறந்த அணிவகுப்பு நடத்தியதிற்காக கோப்பை வழங்கப்பட்டது.
உடல்கல்வி ஆசிரியர் நாகராஜ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைதார். மேடை நிகழ்ச்சிகளை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தினேஷ்குமார் தொகுத்து வழங்கினார். கலை நிகழ்ச்சிகளை இசை ஆசிரியர் திலீப்குமார் ஒருங்கிணைத்தார்.
பட்டதாரி ஆசிரியர் செந்தாமரை நன்றி கூறினார். இந்நிகச்சியில் மாணவ, மாணவிகள், அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

