கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக் கேட்ட நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இரவு, பகுதியில் ஒரு இளைஞரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அவரது நண்பர்கள் குழுவினர் ஒன்று கூடினர்.
கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!
அப்போது அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் இசை வைத்தும், குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, அங்கு இருந்த நபர் ஒருவர் இந்தச் செயலைத் தட்டிக் கேட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் குழுவினர், அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.இந்தத் தாக்குதல் காட்சிகள் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இந்தச் சி.சி.டி.வி ஆதாரத்துடன் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. “பொது இடத்தில் அராஜகத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினர், புகாரைப் பெற்றும் மௌனம் காப்பது ஏன் ?” எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இத்தகைய அட்ராசிட்டிகள் நடப்பது, அப்பகுதி குடியிருப்பாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
சட்டத்தை கையில் எடுக்கும் இதுபோன்ற வன்முறைக் கும்பல்கள் மீது கோவை மாநகரக் காவல்துறை உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

