மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மற்றுமொரு இந்தியக் கப்பல் அபாயகரமான ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
கிரீன் ஆஷா கப்பலின் பயணம்
இந்தியக் கொடியுடன் கூடிய ‘கிரீன் ஆஷா’ என்ற எல்பிஜி டேங்கர் கப்பல், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) அன்று ஹார்முஸ் ஜலசந்தியைப் பத்திரமாகக் கடந்தது.
இது சுமார் 15,400 டன் சமையல் எரிவாயுவை சுமந்து வரும் நடுத்தர அளவிலான காஸ் கேரியர் ஆகும்.
உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ராம்ஸ் துறைமுகத்திலிருந்து மார்ச் 30 அன்று புறப்பட்ட இக்கப்பல், ஈரானின் லாரக் மற்றும் கிஷ்ம் தீவுகளுக்கு மிக அருகில், ஈரானியக் கடற்படையின் தீவிர கண்காணிப்புப் பகுதி வழியாகப் பயணித்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளது.
ஏன் இது ஒரு ராஜதந்திர சாதனை?
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
போர் தொடங்கிய பிறகு இந்தப் பாதையைப் பத்திரமாகக் கடக்கும் 9-வது இந்தியத் தூதரகக் கப்பல் இதுவாகும்.
இந்தியா தனது 90% சமையல் எரிவாயுவை (LPG) இந்தப் பாதை வழியாகவே இறக்குமதி செய்கிறது. எனவே, போர்க் காலத்தில் இந்தக் கப்பல்களின் பாதுகாப்பான பயணம் இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகத்திற்கு மிகவும் அவசியமானது.
இந்திய மீனவர்கள் மீட்பு -345 பேர் வருகை
இதே நாளில் மற்றொரு முக்கியச் செய்தியாக, ஈரானின் தெற்குப் பகுதியில் சிக்கித் தவித்த 345 இந்திய மீனவர்கள் இந்தியத் தூதரகத்தின் முயற்சியால் இன்று (ஏப்ரல் 5) பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஈரானிலிருந்து ஆர்மீனியா வழியாக விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

