காங்கிரஸ் கட்சியில் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியாக இருப்பதும், காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் அவரது அரசியல் பயணத்திற்கு தனித்துவத்தை வழங்கியது.
கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அதே ஆண்டில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகத் தொடர்ந்தார். வழக்கறிஞராகவும் இருந்த விஜயதாரணி, மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு அவரது அரசியல் செல்வாக்கு மேலும் உயர்ந்தது.
சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!
இந்நிலையில், மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலில் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு அதிகமாக இருந்தது. இதற்காக பலமுறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தாலும், அது அவருக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த வாய்ப்பு விஜய் வசந்துக்கு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால், 2024 பிப்ரவரி 24ஆம் தேதி அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் சேர்ந்த பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தாலும், அதுவும் நனவாகவில்லை. தொடர்ந்து கட்சியில் எந்த முக்கிய பதவியும் வழங்கப்படாததால், தனது ஆதரவாளர்களிடம் அவர் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை விளவங்கோடு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் பரவியது.
அதன்படி, இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கிடைத்த இந்த வாய்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

