வோக் மாடலிங் நிறுவனம் சார்பில் கோவையில் நடைபெற உள்ள ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ ஆடிஷனில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதன் இறுதிச்சுற்று வரும் மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு வோக் மாடலிங் (VOGUE MODELING COMPANY) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மாடலிங் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இந்த நிறுவனம் சார்பில் ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ என்ற ஆணழகன் போட்டி மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆடிஷன் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வோக் மாடலிங் நிறுவனர் ஷில்பா சீதாராமன் கூறியதாவது:-
வோக்ஸ் மாடலிங் சார்பில் நடத்தப்படும் ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ நிகழ்ச்சி தற்போது சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முதல் இரண்டு கட்ட ஆடிஷன்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாடல்கள் கலந்துகொண்டனர்.
இதில் 5க்கும் மேற்பட்ட நடுவர்கள் கலந்து கொண்டு முறையான தேர்வுகளை நடத்தி முடித்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் மாடல்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற சுற்றிலும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ‘மேன் ஆஃப் தமிழ்நாடு’ இறுதிச்சுற்றாளர்கள் உட்பட அனுபவமுள்ள நடுவர்கள் பங்கேற்றனர்.
மேலும், வோக்ஸ் குழுவைச் சேர்ந்த இம்ரான், மாடல்கள் ஒருங்கிணைப்பாளர் சபிதா, ‘மேன் ஆஃப் தமிழ்நாடு’ இறுதிச்சுற்றாளர்கள் ஸ்ரீநாத் மற்றும் அஸ்வத் ஆகியோரும் இந்த ஆடிஷனில் பங்கேற்றனர்.ஆண்கள் பிரிவுக்கான பிரத்யேக மாடலிங் மற்றும் பேஜன்ட் போட்டியானது மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மாடலிங் என்பது வெளிப்புற தோற்றம் மட்டும் அல்ல.
தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன் (Grooming), தகவல் தொடர்பு திறன், எதிர்கால இலக்கு ஆகியவற்றையும் வளர்க்கும் ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சி அமையும். வரும் மே 3ஆம் தேதி கோவையில் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. Zone Connect by The Park விடுதியில் நடைபெற உள்ள இந்த போட்டி கோவையில் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாடல்கள், சென்னை மாடல்ஸ் அசோசியேஷன் நடத்தும் மாநில அளவிலான பெரிய அழகிப் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.அதுமட்டுமின்றி, வோக்ஸ் மாடலிங் சார்பில் மாடல்களுக்கு பல்வேறு போட்டோ ஷூட்கள், மேக்கப் ஆர்டிஸ்ட்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளுடன் இணையும் வாய்ப்புகள் கிடைக்கும்படி பரிந்துரைகள் வழங்கப்படும் இவ்வாறு ஷில்பா சீதாராமன் கூறினார்.

