தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என டெல்லி தலைமையிடம் தெரிவித்திருந்த அண்ணாமலை, திடீரென இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அவரை மீண்டும் களமிறக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொள்கிறதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அண்ணாமலையை அவசரமாக அழைத்ததாக கூறப்படும் தகவலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது, அவரை தேர்தல் களத்தில் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
முன்னதாக, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட அண்ணாமலை திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டணி அமைப்பில் அதிமுக, பாஜகவுக்கு கோவையில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் நிலைமைகள் மாறின.
கல்லூரி மாணவி கடத்தல்? வீடியோவை வெளியிட்டு திமுக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!
அதன்படி, கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்ட நிலையில், அங்கு கடந்த முறை கோவை தெற்கில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலைக்கு வாய்ப்பு குறைந்ததாக கருதப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்ததாகவும், அதனை கடிதம் மூலம் கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியது. மேலும், கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகள் சாதகமில்லாதவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது புதுச்சேரியில் இருந்து சென்னை வந்து வேட்பாளர் தேர்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அண்ணாமலையின் இந்த நகர்வு, அவர் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவாரா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக எழுப்பியுள்ளது.

