கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர், அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி, அதில் குடியிருக்க இடம் ஒதுக்கக் கோரி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் நள்ளிரவில் திரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, இருகூர் அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில், திடீரென அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திரண்டனர். தங்களுக்குக் குடியிருக்கச் சொந்தமாக இடம் இல்லை என்றும், இந்த அரசு நிலத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம்.. வெற்றிகரமாக முடிந்த ஆபரேஷன் எலிபெண்ட்..!
கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான இடத்தைத் தீர்மானித்து, கற்கள் மற்றும் குச்சிகளை நட்டு “போட்டி போட்டு” இடத்தைப் பிடித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்து, பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சூலூர் வட்டாட்சியர் (Tahsildar), கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் சூலூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அரசு நிலத்தை இப்படித் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றம் என்றும், நிலம் தொடர்பான கோரிக்கைகளை முறையான மனுக்கள் மூலம் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் விளக்கினர்.
சாலையில் கிடந்த பணம்.. 9 வயது சிறுமியின் நேர்மையால் நெகிழ்ந்த காவல்துறை..!
நள்ளிரவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்து இடம் பிடிப்பது செல்லாது, உடனடியாகக் கலைந்து செல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தகுதி உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்து நிலத்தைப் பிடிக்கும் இத்தகைய சம்பவங்கள் கோவையில் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது அதிகாரிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

